21 October, 2014

நாலடியார் - 6 ஆம் வகுப்பு



   நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கு அணியர் ஆயினும்

    ஈக்கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம்!

    சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய் விளைக்கும்

    வாய்க்கால் அனையார் தொடர். 
                                                                                         -   சமண முனிவர் 

பொருள் :

நாயின் கால்களில் உள்ள சிறியவிரல்கள் இடைவெளியின்றி
நெருங்கியிருக்கும். இதுபோல நன்றாக நெருங்கிப் பழகினாலும், ஈயின் சிறுகால் அளவுகூட உதவி செய்யாதவர்களின் நட்பினால் பயன் இல்லை. வயல்களிலே பாய்ந்து அவைகளிலே தானியங்களை விளையச் செய்கின்ற வாய்க்கால் போன்றவர்களின் நட்பையே தேடிக்கொள்ள வேண்டும். அவர்கள் தொலைத்தூரத்தில் இருந்தாலும் தேடிக்கொண்டுபோய் அவர்களுடைய நட்பைப் பெற வேண்டும்.
இச்செய்யுளிலே நெருங்கிப் பழகுவதற்கு, நாயின் கால் விரல்களும்,
சிறிய உதவிக்கு ஈயின்காலும் உவமானங்களாகக் காட்டப்பட்டன.

சொற்பொருள்:

அணியார் = நெருங்கி இருப்பவர்
என்னாம் = என்ன பயன்?
சேய் = தூரம்
செய் = வயல்
அனையர் = போன்றோர்


*  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நாலடியார்.
*  நானூறு பாடல்களைக் கொண்டது - நாலடியார்.
*  அறக்கருத்துக்களைக் கூறுவது - நாலடியார்.
*  நாலடி நானூறு என்ற சிறப்பு பெயர் உடையது - நாலடியார்.
*  சமண முனிவர்கள் பலர் பாடிய தொகுப்பு நூல் - நாலடியார்.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு
உறுதி; இப்பழமொழி நாலடியாரின் பெருமையைக் காட்டும்; திருக்குறளின் சிறப்பையும் உணர்த்தும். ‘‘நாலு’’ என்பது நாலடியார்; ‘‘இரண்டு’’ என்பது திருக்குறள்.


‘‘பழகு தமிழ்ச்சொல் அருமை நாலிரண்டில்’’ என்பதும் நாலடியின்
சிறப்பையும், திருக்குறளின் பெருமையையும் காட்டும்.


பதினெண்கீழ்க்கணக்கு - விளக்கம்:

*  சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்,    பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக  மொத்தம் பதினொட்டு நூல்கள். 
*  இவற்றை மேல்கணக்கு நூல்கள் எனக் கூறுவர்.
*  சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு -    பதினெண்கீழ்க்கணக்கு
*  பதினெண் என்பது - பதினெட்டு என்று பொருள்.
*  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை - அறநூல்களே.
*  கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறப்படும் நூல் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...